குற்றம்

கடலூர்: பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் மீது கல்லெறிந்த இளைஞர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Sinekadhara

கடலூரில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை கல்லால் அடித்த வாலிபரை தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகள் கல்வி பயில வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளின் மீது ஒளிந்திருந்து மர்ம நபர்கள் கல்லால் அடிப்பதாக பள்ளியில் பயிலும் மாணவிகள் பெற்றோரிடம் கூறி பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடித்ததால் பெற்றோர்கள் இன்று சிறுமிகள் பள்ளிக்கு செல்லும் வரை பின்தொடர்ந்து சென்றிருக்கின்றனர்.

அப்போது மாணவிகள்மீது கல்லெறிந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்த பெற்றோரும், அங்கிருந்த பொதுமக்களும் தர்ம அடி கொடுத்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. முதல்கட்ட விசாரணையில் அவர் சுந்தரசோலபுரம் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் என தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து விருத்தாசலம் ASP அங்கித் ஜெயின் விசாரணை நடத்தி வருகிறார்.

கிராமப் பகுதிகளில் ஏற்கெனவே பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதும் கல்வி கற்பதும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், இதுபோன்று பெண் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவதை சமூக ஆர்வலர்கள் வன்மையாக கண்டித்து கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.