குற்றம்

சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி

EllusamyKarthik

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி யூ-டியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ததுடன், அதில் சிறுமிகள் மற்றும் பெண்களை ஆபாசமான வார்த்தைகளால் பேசி வந்த யூ-டியூபர் பப்ஜி மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார்கள் குவிந்தன. இதனடிப்படையில் பப்ஜி மதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மதனின் மனைவி கிருத்திகா ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து கிருத்திகா ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பப்ஜி மதனை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் போலீசார் அனுமதித்துள்ளனர். முதுகு வலி தொடர்பான சிகிச்சைகள் மதனுக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.