குற்றம்

வயலில் வேலை செய்த பெண் கொலை- ’சைக்கோ’ கொடூரன் வெறிச்செயல்..விசாரணையில் திடுக்கிடும் தகவல்

webteam

பரமக்குடி அருகே வயல் வேலைக்கு சென்ற 55 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சைக்கோவை போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடி தாலுகா பொகலூர் ஒன்றியம் எட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி தெய்வானை (55). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி வீட்டின் அருகே உள்ள வாயிலில் வேலைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் தெய்வானை வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தெய்வானையை தேடி வயல் பகுதிக்கு சென்றனர். அங்கு சகதியில் மூழ்கியபடி தெய்வானை இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தது.

இதுகுறித்து, சத்திரக்குடி போலீசார் நகைக்காக கொலை செய்யப்பட்டார் என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். கொலை செய்யப்பட்ட தெய்வானையின் மகன் காவல் துறையில் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்ததால், வழக்கு தொடர்பாக அவ்வப்போது விசாரணை நடத்தி வந்தார். மேலும், இந்த கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 இதனை தொடர்ந்து கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணையில், “தெய்வானை வயலில் வேலை செய்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது, போகலூர் ஒன்றியம் தீயனூர் காலனியை சேர்ந்த சேம்பர் லாரி டிரைவர் ரவி(36) என்பவர் குடிபோதையில் தெய்வானையிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதற்கு, தெய்வானை மறுப்பு தெரிவித்து விட்டு சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரவி அருகில் கிடந்த கட்டையை எடுத்து தெய்வானையின் பின்பக்க தலையில் அடித்துள்ளார். படுகாயம் அடைந்து மயங்கி அவர் கீழே விழுந்துள்ளார்.

மயக்க நிலையில் இருந்து தெய்வானையை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்து கொண்டு சகதிக்குள் தலையை அமுக்கிவிட்டு சென்றுள்ளார்” என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் ரவியை கைது செய்து சத்திரக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்பு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெய்வானையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும், ஏற்கனவே, சில பெண்களை இதேபோல் செய்துள்ளார் என்பதையும் ஒப்புக்கொண்டார். மேலும், மது அருந்தும் போதெல்லாம் போதை தலைக்கேறியவுடன் கண்ணில் படும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் சைக்கோவாக ரவி இருந்துள்ளார். போதை தலைக்கு ஏறினால் பெண்கள் தேவை என்ற சைக்கோவின் இந்த சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.