குற்றம்

சொத்துத் தகராறு: தாயைக் கொன்ற மகனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு

kaleelrahman

சொத்தை பிரித்துக் கொடுக்காத ஆத்திரத்தில் தாயைக் கொலை செய்த மகனின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மறவன்பட்டியைச் சேர்ந்த திலகராணி (45) என்பவருக்கு 5 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு போதையில் வந்து தகராறு செய்த கணவரின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்ததாக திலகராணியை போலீஸார் கைது செய்தனர், இந்த வழக்கில் திலகராணியை நீதிமன்றம் விடுதலை செய்தது. பின்னர், திலகராணியிடம் சொத்துக்களை பிரித்துத் தருமாறு மகன்கள் தகராறு செய்தனர், இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு சொத்தை பிரித்துக் கொடுக்காத ஆத்திரத்தில் இருந்த மூத்த மகன் ஆனந்த் (26), திலகராணியின் தலையை துண்டித்துக் கொலை செய்தார்.

இந்த வழக்கில் ஆனந்த்துக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை நிறைவேற்ற அனுமதிக்கக் கோரி மலையூர் காவல் ஆய்வாளரும், தீர்ப்பை ரத்து செய்யக்கோரி ஆனந்த்தும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு, மனுதாரர் கொலை செய்த பின்னர் தப்பிக்க நினைக்காமல் கிராம நிர்வாக அலுவலர் முன்பு சரண் அடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆனந்த்தின் வயது, சமூக பின்னணி மற்றும் குடும்ப பொறுப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கீழமை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.