குற்றம்

கொலையில் முடிந்த கோழி தகராறு - சென்னை அருகே சோகம்

கொலையில் முடிந்த கோழி தகராறு - சென்னை அருகே சோகம்

EllusamyKarthik

ஆவடி அருகே கோழி வளர்ப்பினால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை ஆவடியை அடுத்த ஆரிக்கபேடு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார்(வயது 40). இவரது வீட்டின் அருகே அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். 

சசிகுமார் வீட்டில் கோழி வளர்த்து வந்துள்ளார். இந்த கோழி அடிக்கடி அன்பழகன் வீட்டு வளாகத்தில் மேய்ந்து வந்துள்ளது. இதனால் சசிகுமார் அன்பழகன் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கோழி அன்பழகன் வீட்டிற்குச் சென்றுள்ளது. அப்போது அன்பழகனின் மனைவி கோழியைக் கல்லால் அடித்துள்ளார். அதனைப் பார்த்து ஆத்திரமடைந்த சசிகுமார் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் சசிகுமார், அன்பழகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு வரை முற்றியுள்ளது.

இந்த கைகலப்பில் சசிகுமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி  விழுந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சசிகுமார் பரிதாபமாக உயிர் இழந்தார்.

பின்னர் தகவலறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் அன்பழகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோழியால் ஏற்பட்ட இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.