SBI ATM
SBI ATM செய்தியாளர் / எழில்
குற்றம்

“தம்பி..பணம் எடுத்து தர்றீங்களா?”-உதவி கேட்ட முதியவரிடம் ஏடிஎம்-ஐ மாற்றிக் கொடுத்து ரூ89,865-ஐ சுருட்டிய நபர்!

Rishan Vengai

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரியை சேர்ந்த முதியவர் மொய்தீன். இவர் தமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காக பொன்னேரியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இயங்கி வரும் ஏடிஎம்மிற்கு சென்றுள்ளார். அப்போது ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த நபர் ஒருவரிடம் தமது ஏடிஎம் கார்டை கொடுத்து தமது ரகசிய எண்ணை கூறி பணத்தை எடுத்து தருமாறு கூறியுள்ளார். சிறிது நேரத்தில் வங்கியில் பணம் வரவில்லை என கூறிய அந்த மர்ம நபர், முதியவரிடம் வேறு ஏடிஎம் அட்டையை மாற்றி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சிறிது நேரத்தில் அந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூபாய் 89,865 அந்த மர்ம நபர் எடுத்துள்ளார். இதையடுத்து அடுத்தடுத்து வந்த குறுஞ்செய்திகளை கண்டு அதிர்ச்சியடைந்த முதியவர் மீண்டும் ஏடிஎம்மிற்கு சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லை. பணம் திருடப்பட்டதை தெரிந்து கொண்ட முதியவர் தமது ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ATM

இந்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம்மில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.