சென்னையில் இரவு பணி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட காவலரை மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடித்து பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர், பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை அணுகி, தன்னுடன் வாகனத்தில் வருமாறு தகராறு செய்துள்ளார்.
இதைப் பார்த்த பொதுமக்கள் ஓடிவந்து போதையில் இருந்த காவலரை அடித்து உதைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் இதுதொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் குடிபோதையில் இருந்த காவலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜூ என்ற அவர், எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவது விசாரணையில் தெரியவந்தது.