குற்றம்

ஒரே மாதத்தில் 3 வீடுகளில் கொள்ளை - கைவரிசை காட்டியது யார்? அச்சத்தில் மக்கள்!

Sinekadhara

ஓமலூர் அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 35 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கபட்டுள்ளது. பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள பாகல்பட்டி ஓம்சக்தி நகரில் வசிப்பவர் கனகராஜ். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தமிழ்கொடி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், தமிழ்கொடி கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார். கனகராஜூம் வேலைக்கு சென்றுவிட்டார்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கனகராஜ், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்திருகிறது. மேலும் அதிலிருந்த 35 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவை கொள்ளை போனதும் தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த இடத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கனகராஜ் வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள், ஆட்கள் இல்லாததை கண்டறிந்து கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்ததுள்ளது. மேலும் இந்த கொள்ளையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று அந்த பகுதியில் கடந்த மாதம் மட்டும் மூன்று வீடுகளில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.