குற்றம்

கடலூர்: ஒரே இரவில் 9 பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல்; பயணிகள் அச்சம்

Sinekadhara

கடலூர் மாவட்டம் முழுவதும் ஒரே இரவில் ஒன்பது பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் நெல்லிக்குப்பத்தில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பயணிகளுடன் சென்ற பேருந்துமீது மர்ம நபர்கள் திடீரென கல்வீசி தாக்கியதால் பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். குறிப்பாக கடலூர் அருகே திருமாணிகுழி, பண்ருட்டி அருகே குயிலாப்பாளையம், நடுவீரப்பட்டு, விருத்தாசலம் பேருந்து நிலையம், ஆலடி, பெண்ணாடம், சிதம்பரம் அருகே பெரியகுமட்டி என ஒன்பது இடங்களில் பேருந்து மீது கல் வீசப்பட்டது. இதனால் நேற்றிரவு பல இடங்களில் பேருந்துகளுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

இந்நிலையில் தற்போது இது சம்பந்தமாக நெல்லிக்குப்பம் பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கல்வீச்சு சம்பவத்தால் பேருந்துகளின் கண்ணாடிகள் மட்டுமே சேதமடைந்தாகவும் யாருக்கும் காயம் இல்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் எதற்காக நடத்தப்பட்டது என தொடர்ந்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.