குற்றம்

போலீஸ் போல் நடித்து நூதன வழிப்பறி சம்பவம்

போலீஸ் போல் நடித்து நூதன வழிப்பறி சம்பவம்

webteam

சென்னையில் தனியாக செல்லும் முதியவர்களிடம் காவல்துறையினர் போல நடித்து நூதன முறையில் பணம் மற்றும் தங்க நகையை பறிக்கும் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை முகப்பேர் கிழக்கு கோல்டன் காலனியைச் சேர்ந்தவர் கணபதி (57). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகை செல்வதற்காக இரவு நேரத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கணபதியுடன் பேச்சு கொடுத்தார்.இந்த சூழலில் திடீரென அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தங்களை போலீஸ் என்று கூறி கொண்டு கணபதியை மிரட்ட தொடங்கியுள்ளனர். மேலும் "பெண்ணிடம் ஈவ்டீசிங் செய்கிறாயா? கைது செய்யப்போறோம்" என்று கூறி அவரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். 

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த கணபதி, தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனைதொடர்ந்து கணபதியை மிரட்டி தனியாக அழைத்து கொண்டு ஏடிஎம் சென்றுள்ளனர். பின் அந்த மர்ம கும்பல் அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பறித்துள்ளனர். மேலும், திருமங்கலம் பகுதிக்கு கணபதியை அழைத்து சென்று, அங்குள்ள நகைக்கடையில் 4 கிராம் உடைய 2 தங்க நாணயங்களை வாங்கி, அதனை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த கணபதி செய்வதறியாத தவித்துள்ளார்.

இந்நிலையில் கணபதி, இச்சம்பவம் குறித்து நேற்று கோயம்பேடு காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக கணபதியை அழைத்துச் சென்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கணபதியிடம் தகவல்களை கேட்டபோது அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.