குற்றம்

நகை பறித்த போலி சாமியார் கைது

webteam

பரிகாரப் பூஜை செய்வதாகக்கூறி 15 சவரன் நகையுடன் தலைமறைவான போலிச் சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே குமணன்சாவடியைச் சேர்ந்தவர் வசந்தா. தனது மகளுடன் கடந்த மாதம் மேல்மலையனூர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சாமியார் பாபு என்பவர், பரிகாரம் செய்தால் உங்கள் மகளுக்கு விரைவில் திருமணம் ஆகிவிடும் என்று வசந்தாவிடம் கூறியுள்ளார். அதை நம்பிய வசந்தா, பரிகாரம் செய்வதற்காக கடந்த வாரம் பாபுவை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். வசந்தா வீட்டுக்கு வந்த பாபு, பரிகார பூஜைகளை முடித்த பிறகு, உங்களிடம் உள்ள நகை மற்றும் பணத்தை கொடுங்கள், அவற்றை மேல்மலையனூர் கோயிலில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று வசந்தாவிடம் கூறியதாகத் தெரிகிறது. அவரது பேச்சை நம்பி வசந்தா, 15 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்க, அவற்றோடு பாபு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து வசந்தா அளித்த புகாரின் பேரில் மேல்மலையனூரில் தலைமறைவாக இருந்த போலிச் சாமியார் பாபு கைது செய்யப்பட்டார்.