குற்றம்

விடிய விடிய மது அருந்திய 3 பேர் பலியான விவகாரத்தில் திடீர் திருப்பம்: விஷம் கலந்தவர் கைது

JustinDurai
தீபாவளி அன்று விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, முன்பகை காரணமாக விஷம் வைத்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பெயின்டர் வேலை பார்க்கும் சக்திவேல், பார்த்திபன், முருகானந்தம் ஆகிய 3 பேர் கடந்த 3ஆம் தேதி விடிய விடிய மது அருந்தியவர்கள் அடுத்த நாள் காலை தீபாவளியன்று அடுத்தடுத்து உயிரிழந்தனர். மூவரின் உடல்களையும் கைப்பற்றிய பந்தய சாலை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மது அருந்திய பாட்டில்கள் மற்றும் டம்ப்ளர் உள்ளிட்டவற்றை சேகரித்த செய்த போலீசார் அவற்றை ஆய்வுக்கு அனுப்பினர். அதில் சயனைடு என்னும் விஷம் இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து குற்றவாளிகள் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
முன்னதாக பழையூர் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது நான்கு பேர் ஒன்றாக நடந்து சென்றதும், ஒருவர் மட்டும் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த்தும் பதிவாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் (63) என்பவரை பிடித்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் முன்பகை காரணமாக முருகானந்தத்தை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய நிலையில், மது அருந்தும் போது முருகானந்தன் நண்பர்களான சக்திவேல், பார்த்திபன் இருந்த நிலையில் மூவருக்கும் மதுவில் சயனைடு கலந்து கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து ராஜசேகரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் வேறு எவரேனும் உள்ளனரா என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.