குற்றம்

சென்னை: பிரபல கண் மருத்துவமனை வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ.25 லட்சம் திருட்டு

JustinDurai
சென்னையில் பிரபல தனியார் கண் மருத்துவமனையில் நூதன முறையில் 25 லட்சம் ரூபாய் திருடிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் இயங்கி வரும் பிரபல கண் மருத்துவமனையில், வங்கி கணக்கு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, 25 லட்சம் ரூபாய் மாயாமகி இருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், வங்கி பரிவர்த்தனைக்காக ஐந்து சிம்கார்டுகளை வாங்கி இருப்பதும், மொபைல் தொலைந்துவிட்டால், உடனடியாக பயன்படுத்திக் கொள்ள ஐந்து டம்மி சிம்கார்டுகளும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதை அறிந்த மோசடி நபர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் பெயரில் மின்னஞ்சல் அனுப்பி, டம்மி சிம்கார்டை பெற்று, அதன் மூலம் வங்கியில் இருந்து ஓடிபி பெற்று பணத்தை திருடியிருப்பது தெரியவந்துள்ளது. திருடப்பட்ட பணம் அகமதாபாத்தில் உள்ள ஒரு வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.