குற்றம்

ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி - மருத்துவ மாணவருக்கு வலைவீச்சு

webteam

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை பாதியில் கைவிட்டு, ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்  கருவியை பொருத்தி திருட முயன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மனோகர்.  அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்திவரும் இவர், தனது மகன் ஆனந்தை வெளிநாட்டில் மருத்துவப் படிப்பில் சேர்த்துள்ளார். இந்த நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே, மகன் ஆனந்தை பணம் கட்டி படிக்க வைக்க முடியவில்லை. இதனால் மருத்துவப் படிப்பை கைவிட்டு வீடு திரும்பினார் ஆனந்த்.

பின்னர் ஆனந்த் டெல்லியல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதன்பின் சென்னை வந்த ஆனந்த் குடும்பம் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மைலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி வாடிக்கையாளர்கள் தகவலை வைத்து பணத்தை திருட திட்டமிட்டு உள்ளார்.

இதனிடையே திடீரென்று ஏடிஎம் இயந்திரம் பழுதானதைத் தொடர்ந்து, வங்கி ஊழியர்கள் பழுது பார்க்க சென்றபோது ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கி ஊழியர்கள் போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மனோகர் மற்றும் அவரது மகன் ஆனந்த் என்று தெரியவந்தது. இதையடுத்து மனோகரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆனந்தை தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: சொத்து மோசடி வழக்கு - பிரிட்டனை சேர்ந்தவருக்கு ஜாமின் மறுத்து சென்னை நீதிமன்றம் உத்தரவு.!