புதுச்சேரியில் மாணவிக்கு கிரிக்கெட் விளையாட பயிற்சி அளித்த கிரிக்கெட் வீரரொருவர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட இயக்குனர் ஷங்கரின் மருமகன், சம்பந்தி மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி துத்திபட்டில் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான மைதானங்கள் உள்ளன. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னாள் ஆளுநர் கிரண்பேடி, மைதானத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இந்த தடைகள் நீக்கப்பட்டு இப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மைதானம் மூடப்பட்டபோது முத்திரையர்பாளையத்தில் உள்ள இளங்கோவடிகள் அரசு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணன் 17 வயது மாணவிக்கு பயிற்சி அளிக்கும்போது அவ்வப்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி: புதுச்சேரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலர் மீது போக்சோ வழக்கு
பாதிக்கப்பட்ட சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்தார். சங்க நிர்வாகிகள், ‘பயிற்சியாளரிடம் மோதல் வேண்டாம். அனுசரித்து போங்க’ என கூறியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் செய்தார். இதையடுத்து குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் மாணவிக்கு கிரிக்கெட் விளையாட பயிற்சி அளித்த கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் சீண்டல் தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் மாணவி கூறிய புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணனு சாதகமாக செயல்பட்டதாக மற்றொரு கிரிக்கெட் வீரர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்க தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரனின் மகன்தான் அணி கேப்டன் ரோஹித். இவர் பிரபல இயக்குனர் ஷங்கரின் மருமகன் ஆவார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. ரோஹித் தற்போது புதுச்சேரி கிரிக்கெட் விளையாட்டுக்கு கேப்டனாக உள்ளார். இவர்கள் இருவர் உட்பட அனைவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.