குற்றம்

பெரம்பலூர்: காப்பர் கம்பியை திருடிய இடத்திலேயே விற்க வந்த 3 பேர் கைது

webteam

பெரம்பலூரில் திருடிய பட்டறையிலேயே காப்பர் கம்பியை விற்க முயன்றதாக மூன்று பேரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரதாப். இவர், அரியலூர் சாலையில் ஜேசிபி பழுது நீக்கும் பட்டறை வைத்துள்ளார். அந்த பட்டறையில் கடந்த 26ஆம் தேதி ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு காப்பர் கம்பி சுருள்கள் திருடு போயுள்ளது.

இந்நிலையில், மூன்று பேர் காப்பர் கம்பியை விற்பதற்காக அதே பட்டறைக்குச் சென்றுள்ளனர். காப்பர் கம்பியை கையில் வாங்கிய பிரதாப், அதில் தனது பட்டறை பெயர் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அந்த மூன்று பேரையும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் அவர்கள் மூவரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு, மணிகண்டன், மோகன கிருஷ்ணண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.