குற்றம்

கட்டாய திருமணம் நடந்த இரவே காதலனுடன் ஊரைவிட்டு வெளியேறிய சிறுமி - போலீசார் காட்டிய அதிரடி!

Sinekadhara

மதுரை பாலமேடு அருகே 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்ததால் திருமணமாகிய இரவே காதலனுடன் வீட்டைவிட்டு சென்றுவிட்டார். இதனால் காதலனை போக்சோ சட்டத்தின்கீழும், பெற்றோரை குழந்தை திருமண தடை சட்டத்தின்கீழும் போலீசார் கைதுசெய்தனர்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான ரஞ்சித்குமார். இவர் கார் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த பெற்றோர் சிறுமிக்கு உறவினர் ஒருவருடன் கடந்த மாதம் கட்டாய திருமணம் செய்துவைத்ததாகக் கூறப்படுகிறது.

சிறுமிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் திருமணம் முடிந்த அன்றைய தினம் இரவோடு இரவாக காதலன் ரஞ்சித்குமாருடன் மாயமாவிட்டதாகவும், சிறுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் பாலமேடு காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகாரளித்தனர். இந்த நிலையில் திருப்பூரில் சிறுமியும், இளைஞரும் வீடு வாடகைக்கு பிடித்து தங்கியிருந்ததை அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று சிறுமியை மீட்டு மதுரை அழைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியை அழைத்துச்சென்ற காதலன் ரஞ்சித்குமாரை போக்சோ வழக்கிலும், சிறுமியின் தாய், தந்தையரை குழந்தை திருமண தடை சட்டத்திலும் பாலமேடு போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.