குற்றம்

அம்பலமாகும் காதல் மோசடி மன்னன் காசியின் லீலைகள்... மேலும் இரண்டு பெண்கள் புகார்

webteam

நாகர்கோவிலில் பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள காசி மீது மேலும் இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவர் சமூக வலைதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காசி மீது ஏற்கனவே இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சிறையில் உள்ள காசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனக்கோரி நாகர்கோவில் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் போலீசார் காசியை நேரில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நடைபெற்ற விசாரணையில், காசியை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். விசாரணையின் போது காசியை சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் நேரில் அழைத்து சென்று விசாரிக்கவும் இந்த விவகாரத்தில் காசிக்கு உறுதுணையாக இருந்த அவரது நண்பர்களை விசாரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த காசி செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்க இருந்த போது கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல் அவர்களை பார்த்து தனது இரு கைகளால் ஆக்டிங் சிம்பல் காண்பித்து உள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.