குற்றம்

வாக்குவாதத்தில் ஒருவரை கெட்டவார்த்தையால் திட்டி லத்தியால் தாக்கும் சார்பு ஆய்வாளர்.!

webteam

பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒருவரை சார்பு ஆய்வாளர் கெட்ட வார்த்தையால் திட்டி லத்தியால் தாக்கிய சம்பவம் ஒட்டன்சத்திரம் அருகே நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் -தாராபுரம் சாலையில் உள்ளது அம்பிளிக்கை காவல்நிலையம் இந்த காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சவடமுத்து. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொசவபட்டி பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அளவை விட குறைவாக அடிப்பதாக கூறி கொசவபட்டி கிராம இளைஞர்கள் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக உடனே காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சார்பு ஆய்வாளர் சவடமுத்து அங்கு இருந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளார். பின்னர் கொசவபட்டி பகுதியை சேர்ந்த திருப்பதி என்ற ஓட்டுநரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்த போது அந்த நபருக்கும் சார்பு ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த சார்பு ஆய்வாளர், வண்டியில் ஏற‌ மறுத்த திருப்பதி என்பவரை ஆபாச வார்த்தையில் திட்டி லத்தியால் பலமாக அடித்துள்ளார்.

இந்நிலையில் சார்பு ஆய்வாளர் கெட்ட வார்த்தையில் திட்டி லத்தியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி உள்ளது.