குற்றம்

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு: தாயுடன் சேர்ந்து தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்

PT WEB

பெரம்பலூரில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, தாயுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த மகன் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணண் (45), மலர்க்கொடி (40) தம்பதியர். இவர்களுக்கு வெங்கடேஷ் (26) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார்.இதற்கு அவரது தந்தை ராமகிருஷ்ணண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று தந்தை மகனுக்கு இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ராமகிருஷ்ணண் இரவு வீட்டின் முன்பு கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலையில் ராமகிருஷ்ணனின் மகன் வெங்கடேஷ் மனைவி மலர்க்கொடி ஆகிய இருவரும் சேர்ந்து ராமகிருஷ்ணனை கட்டையால் அடித்துக் கொலை செய்து உடலை வீட்டின் பின்புறம் வைத்து விட்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

காலையில் இந்த கொலை தொடர்பான தகவல் தெரிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கொலை செய்யப்பட்ட ராமகிருஷ்ணண் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை தாயுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த மகன் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.