குற்றம்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் ஆன்லைன் மோசடி

webteam

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்களை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் மேல்மருவத்தூர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சக்திநாதன். இவர், பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை இல்லாத காரணத்தால், ஆன்லைனில் வேலைக்காக பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சக்திநாதனை தொடர்பு கொண்ட நபர்கள், போலந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி போலியான பணி ஆணையை தயார் செய்து மின் அஞ்சல் மூலம் அனுப்பி, சுமார் 7 லட்சத்து 14,035 ரூபாயை மோசடி செய்து ஏமாற்றி உள்ளனர்

இதனை அறிந்த சக்திநாதன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு தலைமையில் சுமார் 11 பேர் கொண்ட குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில், புது டெல்லியைச் சேர்ந்த பிரம்ம பிரகாஷ் என்பவருடைய மகன் நவீன் குமார் (24) மற்றும் ராம் சஜீவன் என்பவருடைய மகன் குரூப் சந்து (31) ஆகிய இருவரையும் கைது செய்து மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர்.

பொதுமக்கள் யாரும் சைபர் க்ரைம் குற்றவாளிகளிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்று இணையதளத்தில் வரும் போலியானா வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி யாரும் முன்பணம் தரவேண்டாம். எந்தவொரு நபருக்கும் பணம் அனுப்பும் முன்பு அவரது உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.