குற்றம்

தூங்கிக் கொண்டிருந்த பெண் கல்லால் தாக்கி கொலை - ஒருதலைக் காதலால் இளைஞர் செய்த கொடூரம்

kaleelrahman

திருவாரூர் மாவட்டத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றவாளியை கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது மகள் மோனிகா (18). இவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை பகுதியில் வசிக்கும் ராஜகுமாரி என்பவரது வீட்டில் தங்கி திருச்சி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களின் உறவினரான திருக்களார் கிராமத்தைச் சேர்ந்த பொதியப்பன் என்பவரது மகன் சிவசங்கரன் (28), இறால் பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர், மோனிகாவை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாகவும் மோனிகாவை பெண் கேட்டதற்கு கொடுக்க மறுத்ததாகவும் தெரிகிறது.

இதனையடுத்து நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த மோனிகாவை அம்மிக்கல்லைக் கொண்டு சிவசங்கரன் தாக்கியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த மோனிகாவை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோனிகா அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிவசங்கரனை அப்பகுதி மக்கள் பிடித்து முத்துப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலை காதலால் நடைபெற்ற கொலை சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.