குற்றம்

சிறார்களுக்கு பாலியல் தொல்லையென போலிப் புகார் - கஞ்சா ஆசாமியை பிடித்த பெற்றோர்

webteam

சென்னை அருகேயுள்ள ஆன்மீக மடத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக கொடுத்த புகார் போலியென தெரிய வந்துள்ளது.

சென்னை தாம்பரத்தையடுத்த பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீ சதானந்த மடத்தில் சிறுவர்களுக்கு ஓரினச்சேர்க்கை தொல்லை கொடுக்கப்படுவதாக, சசிகுமார் என்பவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதுதொடர்பாக சிறுவர்கள் பேசிய வீடியோ வெளியானது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சசிகுமாரை பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் மடத்தில் வைத்து சிறை பிடித்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட கிடிக்கிப்பிடி விசாரணையில், அவர் கொடுத்த புகார் போலியானது என்பதை ஒப்புக்கொண்டார். சசிக்குமார் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததை மடத்தில் இருந்த ஆனந்த் என்பவர் தட்டிக்கேட்டதால், அவருக்கு எதிராக சிறுவர்களை மிரட்டி பேச வைத்து புகார் கொடுத்துள்ளார்.

ஆனந்த் மீது எந்த தவறும் இல்லை என்பதையும் சசிக்குமார் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சசிகுமாரை போலீஸாரிடம் அழைத்துச் சென்ற பெற்றோர், உண்மையைக்கூறி ஒப்படைத்தனர். போலிப்புகார் கொடுத்தது தொடர்பாக தற்போது போலீஸார் சசிகுமாரை விசாரித்து வருகின்றனர்.