டெல்லியில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைப்பெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள ஒரு குடியிருப்பில் இருசக்கர வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அசோக் மற்றும் அனில் என்பவர்கள் கவுதம்புரி பகுதியில் வசித்து வருகிறார்கள். ஸ்கூட்டியை நிறுத்துவதில் இவர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைப்பெற்றது. ஒரு கட்டத்தில் இருவரும் சண்டையிட்டுக்கொண்டனர். இதில் அனில் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் அனில் தாக்கப்பட்டதை அறிந்த அவரது உறவினரான நிதின்,மிதுன்,விஷால் மூவரும் அசோக்கை கத்தியால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அசோக் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.இதில் கைதுசெய்யப்பட்டுள்ள விஷால் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 2016ல் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்துள்ளார்.அதன்பின் நொய்டாவில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று தனது பெற்றோரை காண்பதற்காக டெல்லி வந்துள்ளார்.அப்போதுதான் இந்தச்சம்பவம் நடைப்பெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.