குற்றம்

கோவை: தவறான வழக்கால் மன உளைச்சல்: காவல் ஆய்வாளருக்கு ஒரு லட்சம் அபராதம்

webteam

தவறான வழக்கால் மன உளைச்சல் ஏற்பட்டதாக பொறியாளர் அளித்த புகாரில், காவல் ஆய்வாளருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகை எஸ்ஆர்எஸ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். பொறியாளராக வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு விஜயகுமாரின் மனைவி கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார். அவர் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் மீனாம்பிகை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொறியாளர் விஜயகுமாரை கைது செய்து 5 நாட்கள் சிறையில் அடைத்தார்.

இந்த நிலையில் சாதாரண குடும்பத் தகராறை, சரியாக விசாரிக்காமல் வரதட்சணை கொடுமை என்று தவறாக வழக்குப்பதிவு செய்ததும், இல்லாமல் தன்னை சிறையில் அடைத்து மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொறியாளர் விஜயகுமார் சார்பில் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், விஜயகுமார் கொடுத்த புகாரின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் மீனாம்பிகைக்கு 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட விஜயகுமாருக்கு 4 வாரத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.