accused pt desk
குற்றம்

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை – ஒருவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் பணம், லேப்டாப், மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை கொள்ளையடித்த நபரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

webteam

சென்னை மடிப்பாக்கம், ராம்நகர் வடக்கு, ராம்குமார் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி (45). இவர், மருந்து நிறுவனம் ஒன்றில் தேசிய விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். தனது குடும்பத்துடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இவர், கடந்த 1 ஆம் தேதி பணி நிமித்தமாக மும்பை சென்றுள்ளார். இதையடுத்து அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் ஆகியோர் குடும்ப நிகழ்வில் கலந்து கொள்ள விருதுநகர் சென்றுள்ளனர்.

cctv footage

இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், மறுநாள் காலை அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண் வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் உரிமையாளர் தரப்பில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அங்கு சென்ற மடிப்பாக்கம் போலீசார், கைரேகைகளை பதிவு செய்து, அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பின் வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்து விட்டு 40 சவரன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம், லேப்டாப், இருசக்கர வாகனம் ஆகியவை திருடப்பட்டிருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். திருடு போன வீட்டில் சிசிடிவி கேமரா ஏதும் கிடைக்காத நிலையில், பரங்கிமலை துணை ஆணையர் தனிப்படை போலீசார், திருட வந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை வீட்டிலேயே விட்டு விட்டு, வேறொரு இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு வீட்டுக்கு சென்றதை கண்டறிந்துள்ளனர். இதை வைத்து மடிப்பாக்கத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வளசரவாக்கம் வரை சென்று திருடனை வீட்டில் வைத்து கைது செய்தனர்.

arrested

இதையடுத்து அவரிடமிருந்து 15 சவரன் தங்க நகை, 191 கிராம் வெள்ளி பொருட்கள், 1.10 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கைதான நபர் வளசரவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா (எ) கொசுரு சூர்யா (23), என்பதும் இவர் மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், ஆதம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சூர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.