குற்றம்

ஆவின் நிறுவன முறைகேடு புகார் - ரூ.5.93 கோடிக்கான ஆவணங்கள் மாயமானது கண்டுபிடிப்பு

Sinekadhara

ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பான புகாரில், 5 கோடியே 93 லட்சம் ரூபாய்க்கான ஆவணங்கள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2018 மற்றும் 2019ஆம் ஆண்டில் ஆவின் விற்பனை பிரிவு விளம்பரங்கள் தொடர்பாக 10 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அதுதொடர்பாக விசாரணை அதிகாரி அலெக்ஸ் ஜீவதாஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 10 கோடியே 37 லட்சம் ரூபாய் முறைகேடு தொடர்பான புகாரில், 4 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவினத்துக்கான 78 கோப்புகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

எஞ்சிய 5 கோடியே 93 லட்சம் ரூபாய்க்கான கோப்புகள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுதொடர்பாக துணை பதிவாளர் நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் பால்வள இயக்குநர் கந்தசாமி ஆணையிட்டுள்ளார். முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளான தணிக்கைத்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.