குற்றம்

ஆறு பேரை திருமணம் செய்து நூதன மோசடி: 7-வது திருமணம் செய்ய முயன்று சிக்கிய பெண்

webteam

பரமத்தி வேலூரில் ஆறு திருமணம் செய்து ஏழாவது திருமணத்திற்கு தயாரான மணப்பெண் உள்பட 4 பேரிடம் வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த வெங்கரை கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால் (35). இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7-ஆம் தேதி கொளக்காட்டுப்புதூர் அருகே உள்ள புதுவெங்கரை அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பெண் வீட்டார் சார்பாக பெண்ணின் அக்காள், மாமா எனக்கூறி இருவரும், மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் பாலமுருகன் (45) ஆகிய மூவர் மட்டுமே வந்திருந்தனர்.

இந்நிலையில், திருமணத்தை முடித்துவிட்டு பெண் புரோக்கர் பாலமுருகன் திருமண கமிஷன் தொகையாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். புது மாப்பிள்ளை தனபால் கடந்த 9 ஆம் தேதி காலை எழுந்து பார்த்தபோது தனது மனைவியை காணவில்லை. பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து புரோக்கர் பாலமுருகன் மற்றும் அவரது உறவினர்களாக வந்தவர்களின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பீரோவை திறந்து பார்த்தபோது கல்யாண பட்டு புடவை, கொண்டு வந்த துணிமணிகள் அனைத்தும் காணவில்லை. அதிர்ச்சிடைந்த தனபால் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தவுடன் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்ய மணமகளை தேடியுள்ளனர்.

அப்போது வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. இது குறித்து மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமியிடம் (45) மாப்பிள்ளை வீட்டார் பேசியுள்ளனர். அப்போது மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்துள்ளது என தொலைபேசியில் பேசி முடிவு செய்துள்ளனர்.

திருச்செங்கோட்டில் திருமணம் செய்வதாக முடிவு செய்து வியாழக்கிழமை காலை சந்தியா, தனலட்சுமி உறவினர் ஐயப்பன் ஆகியோர் கார் ஒன்றில் வந்துள்ளனர். அப்போது தனபால் மற்றும் உறவினர்கள் அங்கு காத்திருந்தனர். அங்கு வந்த மணப்பெண் சந்தியா மற்றும் பெண் புரோக்கர், உறவினர் என மூவரையும் பிடித்து பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை சேர்ந்த இவர்கள் இதுவரை சந்தியாவுக்கு ஆறு திருமணம் செய்து வைத்துள்ளதும், ஏழாவதாக திருமணம் செய்ய முயன்றபோது சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், ஒவ்வொரு திருமணத்தின் போதும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு இரண்டு நாள் மாப்பிள்ளையிடம் நெருங்கி பழகிவிட்டு கணவன் இரவில் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் போது உடைமைகளை எடுத்துக்கொண்டு தலை மறைவாகி விடுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனையடுத்து மதுரையைச் சேர்ந்த சந்தியா, பெண் புரோக்கர் பாலமுருகன், தனலட்சுமி, தனலட்சுமியின் உறவினர் ஐய்யப்பன் ஆகிய நான்கு பேரிடம் வேலூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.