குற்றம்

திருப்பூரில் வடமாநில பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 3பேர் கைது

webteam

திருப்பூர் மாவட்டத்தில் வடமாநிலப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவர் திருப்பூர் அருள்புரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரிடம் வேலை வாங்கித்தர கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து கடந்த 28 ஆம் தேதி ராஜேஷ் நேரில் வரச் சொன்னதன் பேரில், வடமாநிலப்பெண்ணும் சென்றுள்ளார். சில இடங்களில் இருவரும் இணைந்து வேலைத் தேடிய நிலையில் பெண்ணுக்கு வேலை கிடைக்க வில்லை எனத் தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து ராஜேஷிடம் சம்பந்தப்பட்ட பெண் தன்னை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தனது தம்பி ராஜூவுடன் பெண்ணை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் ராஜூ அவரை பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் உகாயனூர் அருகில் உள்ள பாறைக்குழிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே ராஜூ வின் நண்பர்கள் தமிழ் , தாமோதரன், அன்பு, கவின் ஆகியோர் காத்திருந்தனர்.

இதனைதொடர்ந்து அவர்கள் பெண்ணை கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண், காவல்துறையில் புகார் அளித்ததின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜூ , அன்பு , கவின் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த செல்போன், பணம், இருசக்கரவாகனம் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள தமிழ் , தாமோதரன் , ராஜேஷ்குமார் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.