குற்றம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 48 வயாதான நபர் போக்சோவில் கைது

kaleelrahman

பந்தலூரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் அத்துப்பா (48). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை நீண்ட நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதில், சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரணை மேற்கொண்டதில் அத்துப்பா இதற்கு காரணம் என தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து புகாரின் பேரில் அத்துப்பாவை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் கேரளாவில் தலைமறைவானார். இந்நிலையில் நேற்று கேரளாவில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அத்துப்பாவை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.