திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற புதுமணப்பெண், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
வாழவந்திபுரத்தைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. இன்று அதிகாலை 3 மணிஅளவில் இயற்கை உபாதையை கழிக்க வீட்டின் அருகில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்கு தனியாகச் சென்ற அருள்ராஜின் மனைவி வீடு திரும்பவில்லை. இதையடுத்து அருள்ராஜூம், அவரது உறவினர்களும் பெண்ணைத் தேடியபோது, ஆற்றில் தேங்கிய குட்டைநீரின் கரையோரத்தில் உடலில் ஆடையின்றி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் அணிந்திருந்த நகைகளை காணவில்லை. சமயபுரம் காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. நகைக்காக புதுமணப்பெண் கொல்லப்பட்டாரா? பாலியல் வன்கொடுமையா என பல கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. புதுமணப்பெண்ணிற்கும், அருள்ராஜூக்கும் இடையே நல்ல புரிதல் இல்லை என்று கூறப்படுவதால் அவரும் காவல்துறையினரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு, கைரேகை நிபுணர்களும், மோப்பநாய் ஸ்பார்க்கும் வரவழைக்கப்பட்டது. ஆற்றிலியே சிறிது நேரம் சுற்றிச்சுற்றி வந்த மோப்பநாய் யாரையும் பிடிக்கவில்லை.சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் நேரில் ஆய்வு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்.