செய்தியாளர்: மருதுபாண்டி
நெல்லை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர் (55) - செல்வராணி (53) தம்பதியர். இவர்களது மகள் ஜெனிபர் (30) அதே தெருவைச் சேர்ந்த மரியகுமார் (36) என்பவரை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மரிய குமாருக்கும் அவரது மனைவி ஜெனிபருக்கும் இருந்த குடும்ப பிரச்னை காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஜெனிபர், கணவரிடம் இருந்து பிரிந்து பெற்றோர் வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்று விட்டதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு மரியகுமார், தனது மாமனார், மாமியாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த மரியகுமார் மாமனார் பாஸ்கர் மற்றும் மாமியார் செல்வராணி ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு பெருமாள்புரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது அவரை கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.