குற்றம்

'பராமரிக்க முடியவில்லை'- பாட்டியை எரித்துக் கொன்ற பேத்திகள்

kaleelrahman

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டையில் 90 வயது மூதாட்டியை எரித்து கொன்ற பேத்திகள் கைது செய்யப்பட்டன

நெல்லை மாநகரம் பேட்டை காவல் நிலைய சரகத்தில் கடந்த 03.05.2022 அன்று; பேட்டையிலிருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையருகே அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு பிரேதம் ஒன்று எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் பழையபேட்டை கிருஷ்ணபேரியைச் சேர்ந்த பொன்.ஆறுமுகம் பிள்ளை என்பவரது மனைவி மாரியம்மாள் (30) மற்றும் இவரது சகோதரியான செக்கடி தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரின் மனைவி மேரி (38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் மேற்படி இருவரும், அவர்களது பராமரிப்பில் இருந்து வந்த அவர்களுடைய பாட்டி சுப்பம்மாள் (90) என்பவரை கவனிக்க முடியவில்லை என்ற காரணத்திற்காக அவரை ஒரு ஆட்டோவில் அழைத்துச் சென்று எரித்து கொன்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.