குற்றம்

நெல்லை: பணகுடி பகுதியில் தொடரும் குழந்தை திருமணம்

webteam

பணகுடி அருகே சிவகாமிபுரத்தில் பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞரின் பெற்றோர் மற்றும் மாணவியின் பெற்றோர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் சிவகாமிபுரத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவிக்கு அவரது பெற்றோர் அதேபகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞருக்கு நேற்று திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அதே ஊரைச் சேர்ந்தவர்கள், நெல்லை குழந்தைகள் நலக் காப்பகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அடிப்படையில் பணகுடி போலீசார் சம்பவம் குறித்து இரு தரப்பு பெற்றோர்களையும் தேடி வருகின்றனர். ஏற்கெனவே இதே ஊரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை திருமணம் ஒன்று நடைபெற்ற நிலையில் தற்பொழுது மீண்டும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பணகுடி பகுதியில் நடைபெற்ற குழந்தை திருமணம் சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது..