குற்றம்

கறி விருந்தில் மது அருந்தியபோது வாக்குவாதம்.. துப்பாக்கியால் சுட்ட ரியல் எஸ்டேட் அதிபர்!

webteam

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கறி விருந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது தொடர்பாக 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காட்டு பத்திரகாளியம்மன் கோயிலில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தனசேகரன் என்பவர் கறி விருந்து வைத்துள்ளார். இதில், கலந்து கொண்ட தனசேகரின் நண்பர்கள் இடையே மது அருந்திய போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த ரியல் எஸ்டேர் தொழில் செய்து வரும் வேதகிரி என்பவர், தனது காரில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டுள்ளார்.

தகவல் அறிந்து காவல்துறையினர் சென்ற நிலையில், வேதகிரி அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. அவரின் அலுவலக உதவியாளர் சக்திவேல் மற்றும் கணபதியை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமங்கலம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட வேதகிரியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார் தலைமையிலான காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.