குற்றம்

நாமக்கல் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - நான்கு பேர் கைது

webteam

நாமக்கல்லில் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் கொலை வழக்கில்  நாமக்கல் போலீசார் நான்கு பேரை பேரை கைது செய்து உள்ளனர்.

நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்‌ (40). இவர் பட்டறைமேடுப் பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 01-ம் தேதி ஜெயக்குமார் கூலிப்பட்டி அருகே தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டுக் காயங்களுடன் கிடந்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீசார்  விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இது தொடர்பாக அதேப் பகுதியைச் சேர்ந்த நிவாஸ், சஞ்சீவி, பாண்டியராஜன் மற்றும் சரவணன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஜெயக்குமாரிடம் சஞ்சீவி கடந்தாண்டு தனது இருச்சக்கர வாகனத்தை அடமானம் வைத்து 15 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வாங்கிய கடனை திருப்பி செலுத்திய சஞ்சீவி ஜெயக்குமாரிடம் தான் அடகு வைத்த இருச்சக்கர வாகனத்தை திருப்பி கேட்டதாகவும் அதனை ஜெயக்குமார் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும்  சொல்லப்படுகிறது.

இதனால் கடந்த மாதம் 30-ம் தேதி இரவு மது அருந்தும்போது ஜெயக்குமாருக்கும் சஞ்சீவிக்கும் தகராறு ஏற்பட்டதாகக் தெரிகிறது.  இதில் சஞ்சீவி தனது நண்பர்களான நிவாஸ், பாண்டியராஜன் மற்றும் சரவணன் ஆகியோருடன் சேர்ந்து ஜெயக்குமாரை தலை மற்றும் கழுத்து பகுதியில் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சஞ்சீவி,நிவாஸ், பாண்டியராஜன் மற்றும் சரவணன் ஆகிய 4 பேரை கைது செய்த நாமக்கல் போலீசார் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.