பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக அளவில் குற்றச்செயல்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலங்கள் குறித்த விவரங்களின் தகவல்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி, நாட்டிலேயே குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மொத்த குற்றச்செயல்களில் 9.5 சதவிகித குற்றங்கள் உத்தரப்பிரதேசத்தில் தான் நடைபெற்றுள்ளன. அதற்கு அடுத்த படியாக 2ஆம் இடத்தில் மத்திய பிரதேசத்தில் 8.9 சதவிகித குற்றங்கள் நடைபெற்றுள்ளன.மூன்றாம் இடத்தில் மகாராஷ்டிராவில் 8.8 சதவிகிதமும், கேரளாவில் 8.7 சதவிகித குற்றங்களும் நடந்துள்ளன.
இதன்படி இந்திய அளவிலான மொத்த குற்றச்செயல்களில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தான் அதிக குற்றங்கள் நடந்துள்ளன. அத்துடன் 2016ல் நாட்டில் குற்றச்செயல்கள் 2.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2015ல் 47.10 லட்சம் குற்றவழக்குகள் இருந்த நிலையில் 2016ல் 48.31 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் 2015ஐ விட 2016ல் கொலைகள் குறைந்துள்ளதகாவும், 2015ல் 32,127 கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், 2016ல் 30,450 கொலைகள் நடைபெற்றுள்ளதாக ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.