murder pt desk
குற்றம்

நாமக்கல்: விபத்தில் கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் செயல்

நாமக்கல் அருகே கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கு உதவிய ஆண் நண்பரை மோகனூர் போலீசார் தேடி வருகின்றனர்.

webteam

நாமக்கல் அடுத்த மோகனூர் அருகே உள்ள செல்லிபாளையமத்தைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மகன் பெரியசாமி (37). இவர், கடந்த 23 ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அவரது மனைவி பிரேமா தனக்கு காது வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து பெரியசாமி, தனது இருசக்கர வாகனத்தில் பிரேமாவை அழைத்துக் கொண்டு மோகனூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

prema

அப்போது பொய்யேரி பாலம் அருகே வந்தபோது, பிரேமாவும், அவரது ஆண் நண்பர் நந்தி கேசவனும் சேர்ந்து பெரியசாமியை. கடப்பாரையால் அடித்துக் கொலை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து பிரேமா, தனது குடும்பத்தினருக்கு போன் செய்து, அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் மோதி பெரியசாமி இறந்து விட்டதாகக் கூறி நம்ப வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பிரேமாவின் நடவடிக்கையில், சந்தேகமடைந்த குடும்பத்தினர் பிரேமாவிடம் விசாரித்துள்ளனர். அப்போது பிரேமா, தனது திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால் தனது கணவரை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் பிரேமாவை கைது செய்த மோகனூர் காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்து தலைமறைவாக உள்ள நந்தி கேசவனை தேடி வருகின்றனர்.