செய்தியாளர்: எம் துரைசாமி
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த அரூர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் காராள கவுண்டர் (85). இவர் தனது மகன் முருகேசன் (50) உள்ளிட்டோருடன் தோட்டத்தில் வசித்து வந்தார். மதுவுக்கு அடிமையான முருகேசன், போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்ற நிலையில், தற்போது வீட்டில் தங்கி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முருகேசன் தனது தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தை காராள கவுண்டரை விறகு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த மோகனூர் காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து முருகேசனை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் தந்தை மது அருந்த பணம் தராதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.