குற்றம்

நாமக்கல்: காதலிப்பதாக கூறி சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

kaleelrahman

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அருவங்காடு பகுதியில் விசைத்தறி தொழில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சேலத்தைச் சேர்ந்த பெண் கூலித் தொழிலாளி தனது 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த 14 வயது சிறுமி வீட்டில் இருந்து காணாமல் போனார். இதையடுத்து அருகில் தேடியும் சிறுமி கிடைக்காததால் குமாரபாளையம் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஓமலூரில் சிறுமி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது குமாரபாளையம் தொழில் பூங்காவில் வேலை செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறியும் திருமணம் செய்து கொள்வதாக கூறியும் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் ஹரிகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.