மருத்துவமனை
மருத்துவமனை PT
குற்றம்

”மயக்க ஊசி போட்டு கணவரை கொன்றுவிட்டார்கள்” எனக்கூறி மனைவி கதறல்.. நாகை அரசு மருத்துவமனையில் சோகம்!

Jayashree A

நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் தன்னுடைய கணவர் இறந்துவிட்டார் என்றும் காலையில் நன்றாக இருந்தவரை மருத்துவர்கள் ஊசி போட்டு கொன்றுவிட்டார்கள் எனவும் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் வயது 55. இவர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் துணை தலைவராக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணி அருகே நடந்து சென்ற போது எதிரே வந்த இருச்சக்கர வாகனம் மோதியதில் இடது கால் உடைந்துள்ளது.

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு அப்போது காலில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளர். அதனைத் தொடர்ந்து அதே மருத்துவனையில் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை மீண்டும் காலில் அறுவை சிகிச்சை செய்து இரும்பு பிளேட் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்லி உள்ளனர். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு கொண்டு சென்று மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து ஜேசுதாஸ் மனைவியிடம் உங்கள் கணவருக்கு மாரடைப்பு உள்ளதா? என கேள்வி எழுப்பினர். பின்னர் மீண்டும் வந்து அவருக்கு மாரடைப்பு எற்பட்டுள்ளதாக தெரிவத்துள்ளனர். சிறிது நேரத்தில் ஜேசுதாஸ் உயிரிழந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் கதறி அழுதார். காலை வரை நன்றாக இருந்தவரை மயக்க ஊசி போட்டு கொன்று விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கேட்ட போது எலும்பு இருக்க கூடிய மஜ்ஜை இரத்தத்தில் கலந்து இதய அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். நாகையில் காலில் அறுவை சிகிச்சை சென்றவருக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.