குற்றம்

பிடித்த பாடலை வைக்கவில்லை! ஓட்டுநர், நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல்

webteam

நாகை அருகே பேருந்தில் பிடித்த பாடலை ஒலிக்கச் செய்யாததால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து ஆய்மழை கிராமத்திற்கு செல்லும் தனியார் மினி பேருந்தில் நாகை கோட்டைவாசல்படி பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணி ஒருவர் ஏறி உள்ளார். பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் பேருந்தில் ஒலித்த பாடலை மாற்றி வேறு பாடல் வைக்குமாறு அந்த நபர் ஓட்டுநரிடம் கூறியுள்ளார். பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் வேறு பாடலை மாற்றுவதற்கு மறுத்த நிலையில், அந்த நபர் சிக்கல் பேருந்து நிலையத்திலேயே இறங்கியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து ஆய்மழை கிராமத்திற்கு சென்ற மினி பேருந்து அதே வழியாக மீண்டும் நாகை வந்துள்ளது. வேறு பாடல் வைக்காததால் ஆத்திரம் அடைந்து பேருந்தின் வருகைக்காக காத்திருந்த அந்த நபர், சிக்கல் ரயில்வே கேட் அருகே தனது நண்பர்கள் 7 பேர் கொண்ட கும்பலோடு காத்திருந்து பேருந்தை மடக்கி நிறுத்தியுள்ளார்.

பேருந்தை நிறுத்திய வேகத்தில் பேருந்து ஓட்டுநர் பாரதி மற்றும் நடத்துநர் பாலமுருகன் ஆகிய இருவரையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கி அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் தரதரவென இழுத்துச் சென்ற அந்தக் கும்பல் அவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது. பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகளும், நடத்துநர் ரத்தக் காயங்களுடன் நின்று கொண்டிருக்கும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தாக்குதலுக்கு உள்ளான தனியார் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தில் பிடித்த பாடலை வைக்காததால் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.