குற்றம்

இளைஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்: மதுரையில் பரபரப்பு

kaleelrahman

மதுரையில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வி.கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளி ஆறுமுகம் என்பவரின் மூத்த மகன் பிரவீன் (21). இவர், இன்று காலை நண்பர்களை பார்க்க செல்வதாகக்கூறி வெளியே சென்றுள்ளார். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஓடைக்கரை ஓரத்தில் பிரவீன் அமர்ந்து இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பிரவீனை ஓட ஓட விரட்டி, கொடூரமாக வெட்டிக்கொலை செய்து அங்கிருந்து தப்பிடியோடியுள்ளனர்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரவீன் உயிரிழந்த நிலையில், இதனை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பிரவீன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்த கூடல்நகர் போலீசார், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.