பலமுறை எச்சரித்தும் கேட்காமல் தகாத தொடர்பில் இருந்ததால் கத்தியால் குத்திக் கொன்றேன் என கைதான கணவர் கூறியுள்ளார்.
நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தை சேர்ந்தவர் ராமதாஸ். மர பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி லீலாவதி (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ராமதாஸ் தனது மனைவியை பிரிந்து மகனுடன் தனியாக சென்றார். மர பட்டறையின் மேல் மாடியில் உள்ள வீட்டில் நீலாவதி மட்டும் தனியாக வசித்து வந்தார்.
மர பட்டறைக்கு வரும்போது ராமதாசுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ராமதாஸ் மகன், மர பட்டறைக்கு வந்த சமயத்தில் நீலாவதி வாலிபர் ஒருவருடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்ததும் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆத்திரத்தில் ராமதாஸ் வந்து தகராறு செய்துள்ளார். அந்த சமயத்தில் ராமதாஸ் தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் நீலாவதி இறந்தார்.
பின்னர் ராமதாஸ் ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து ராமதாஸ் கூறியிருப்பதாவது:
குடும்ப தகராறு காரணமாக எனது மனைவியை பிரிந்து மூன்று வருடங்களுக்கு மேல் மகனுடன் வாழ்ந்து வருகிறேன். எனது மனைவியின் நடத்தை சரியில்லை. பலருடன் தொடர்பில் இருந்துள்ளார். பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை. மகன் பெரியவனாகி விட்டான்; இனி அவனுக்காக திருந்த வேண்டும் என்று கூறியும் அவர் மாறவில்லை.
அக்கம்பக்கத்தினர் வந்து சொல்லும் போது கூட பொறுமையாக இருந்தேன். ஆனால் பெற்ற மகனே பார்த்து கூறும் அளவுக்கு அவள் நடந்து கொண்டாள். எனது மகன் என்னிடம் கூறிய ஆத்திரத்தில் நான் சென்றேன். இதுபற்றி கேட்டபோது என்னை அவதூறாக திட்டினாள். இதனால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன்.’’இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கடைசியாக நீலாவதியுடன் இருந்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.