குற்றம்

தனியார் பேருந்து ஊழியர் கொலை

webteam

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பத்தில் தனியார் பேருந்து ஊழியரை கொலை செய்து கால்வாயில் தூக்கி வீசிய கும்பலை போலீசார்
வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி குமரகுருபள்ளத்தை சேர்ந்தவர் அருள் (32). தனியார் பேருந்து நிறுவனத்தில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு நண்பர்களை பார்க்க செல்வதாக, வீட்டில் சொல்லி விட்டு அரியாங்குப்பம் பகுதிக்கு வந்தார். இந்த நிலையில் அரியாங்குப்பம் காலிமனை பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் அருள் இன்று பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து அரியாங்குப்பம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

 முதுநிலை காவல்கண்காணிப்பாளர் ராஜீவ்ரஞ்சன், தெற்குப்பகுதி காவல்கண்காணிப்பாளர் அப்துல்ரகீம், காவல் ஆய்வாளர் ரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு வந்து அருள் உடலை பார்வையிட்டனர். 
சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட மோப்பநாய், சிறிது தூரம் ஓடியது. யாரையும் பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.