குற்றம்

இபிஎஸ் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பல லட்சம் ரூபாய் மற்றும் செல்போன் திருட்டு- வழக்கு பதிவு

webteam

ராசிபுரம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற வரவேற்ப்பு மற்றும் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பல லட்சம் ரூபாய் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் திருட்டு சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டைமேடு மற்றும் ராசிபுரம் பகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி அணியினரின் கட்சியின் 51-வது ஆண்டு் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் வாகனங்களில் அழைத்துவரப்பட்டிருந்தனர். இதில் எடப்பாடியை தொண்டர்கள் அழைத்து வந்த போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி உள்ளே நுழைந்த மர்ம கும்பல் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் பாக்கெட்டில் இருந்து பர்ஸ், ரொக்கம், வி்லை உயர்ந்த செல்போன் போன்றவற்றை பிக்பாக்கெட் அடித்து சென்றுள்ளனர். இதே போன்று பலரின் ரொக்கம் திருடப்பட்டுள்ளது.

எடப்பாடி பங்கேற்ற பொதுகூட்டத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி இது போன்ற சம்பவம் நடந்திருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியையும், பெருத்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கட்சி தொண்டர்கள் பலரின் செல்போன்களும் பணமும் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிமுகவின் முக்கிய கட்சி பிரமுகர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.