குற்றம்

தினமும் லேட்டா? தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி

rajakannan

வேலைக்கு சென்றுவிட்டு தினமும் தாமதமாக வருவதால் ஆத்திரம் அடைந்த மனைவி, தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பணிக்கு சென்று தாமதமாக வந்த கணவனுக்கு விபரீதமான தண்டனை கிடைத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் அஹிவர் (38). அவரது மனைவி சிவ்குமாரி (35). அரவிந்த் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். வேலைக்கு சென்றுவிட்டு தாமதமாக வருவதால் அவருக்கு மனைவி சிவ்குமாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்படிதான் சில தினங்களுக்கு முன்பு ஓர் இரவில் அரவிந்த் வேலைக்கு சென்றுவிட்டு தாமதமாக வந்துள்ளார். அன்றும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.

பின்னர், எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர். கோபம் குறையாத மனைவி சிவ்குமாரி, கொதிக்கும் எண்ணெய்யை தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய கணவரின் முகத்தில் மீது ஊற்றியுள்ளார். அதுவும் அதிகாலை 5 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொதிக்கும் எண்ணெய்யால் வலி தாங்க முடியாமல் அரவிந்த் சத்தமிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அவர்களின் அறைக்கு மற்றவர்கள் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அரவிந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சிவ்குமாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். படுகாயங்களுடன் தன்னுடைய கணவர் மருத்துவமனையி சிகிச்சை பெற்று வரும் நிலையில், மனைவி சிவ்குமாரி தன்னுடைய செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.