ரமேஷ், சத்யா
ரமேஷ், சத்யா pt
குற்றம்

“என்னைவிட குழந்தையிடம் பாசம் காட்றார்”- நாடகமாடிய தாய்.. கிணற்றில் கிடந்த 1 மாத பிஞ்சு; பகீர் உண்மை!

யுவபுருஷ்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் விஜயா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்(25). இவர் சத்யா(22) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 8 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நேற்று பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோயிலில் தீமிதி திருவிழா நடந்த நிலையில், கோயிலில் தீச்சட்டி எடுக்க சென்றுள்ளார் ரமேஷ். அப்போது, குழந்தையை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு சத்யாவும் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்தபோது, கழிவறைக்கு சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது தன்னுடைய குழந்தையை காணவில்லை என அலறி துடித்துள்ளார் சத்யா. தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் தேடியபோது அருகில் உள்ள கிணற்றில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சோழவரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தாய் சத்யாவே குழந்தையை மறைத்து எடுத்துச்சென்று கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து சத்யாவிடம் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை செய்ததில், “குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை குறைந்த எடையில் இருக்கிறது.

இதனால், வருங்காலத்தில் ஊனமாக மாறிவிடுமோ என்ற பயம் இருந்தது. மேலும், தாய்ப்பாலும் சுரக்கவில்லை. இவை அனைத்தையும் தாண்டி, கணவர் என்னை விட குழந்தையிடம் பாசத்தை காட்ட தொடங்கிவிட்டார். இதனால்தான் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தேன்” என்று பகீர் தகவலை கூறியுள்ளார் தாய் சத்யா. இதனையடுத்து, கிணற்றில் வீசி குழந்தையை கொலை செய்து நடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.