கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காட்டேரியில் அமைந்துள்ளது அரசு மதுபானக்கடை. இந்தக் கடையில் முருகன், ஆனந்தன் என இருவர் பணியாற்றி வருகின்றனர். இந்த மதுபானக்கடை அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளதால் குடிமக்கள் அதிகமாக இரவு நேரத்தில் செல்வது அதிகம். இதனால் அந்தக் கடை அரசு நிர்ணயித்த கடையை மூடும் நேரத்தை விட கூடுதலாக இரவு நேரங்களில் செயல்படுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணிக்குமேல் மதுக்கடையை மூடிவிட்டு அன்றைய விற்பனை தொகையான ரூ.3.5 லட்சத்தை இரண்டு சக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு ஊழியர்கள் அவர்களின் சொந்த ஊரான அனுமந்தீர்த்தத்திற்கு வாகனத்தில் செல்லும் போது இவர்களை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் இவர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளனர். மதுக்கடை ஊழியர்களான முருகன், ஆனந்தன் குண்டடிப்பட்டு நடுரோட்டிலேயே சாய்ந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் ஊழியர்களிடம் இருந்த பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த இருவரையும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி மற்றும் சேலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனையெடுத்து தகவலறிந்த ஊத்தங்கரை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.