குற்றம்

`ஆவணங்கள் இல்லை’- சசிகலாவின் உறவினர் மீதான பணமோசடி வழக்கு தள்ளுபடி

நிவேதா ஜெகராஜா

சசிகலா உறவினரான இளவரசியின் மருமகன் ராஜராஜனுக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகியிருக்கிறது.

`கடந்த 2016 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது சேலம் மாவட்ட சட்டமன்ற தொகுதியில் அதிமுகவில் போட்டியிட எம்.எல். ஏ சீட் வாங்கி தருவதாக கூறி சுமார் 5 கோடி ரூபாயை பெற்று கொண்டு, சீட் வாங்கி தராமலும் மற்றும் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றினார்’ எனக்கூறி இளவரசியின் இரண்டாவது மருமகனான ராஜராஜன் மீது வழக்கொன்று தொடுக்கப்பட்டிருந்தது.

இதில் பாதிக்கப்பட்டதாக சேலம் செம்மலை தோட்டத்தை சேர்ந்த என்.பி.கருணாகரன் என்பவர், சென்னை மத்திய குற்றபிரிவில் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். எனவே நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிட்டு, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி சென்னை எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பணம் கொடுத்தது தொடர்பாக எந்த ஆவணங்களும் முறையாக இல்லாததால் ராஜராஜனுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.